கும்ப ராசி நேயர்களே ! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

கும்ப ராசி நேயர்களே !

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடையவர்களே! புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொழிலதிபர்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரத்தில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள். சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றிபெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சிலர் வாஸ்துப்படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சிலர் வாஸ்துப்படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்துவீர்கள். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 1.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியன் சனியுடன் சேர்வதால் அரசால் அனுகூலம் உண்டு. பூர்விகச் சொத்தால் வருமானம் வரும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். பணப் பற்றாக்குறையும் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கியும் பேச வேண்டாம், தூக்கியும் பேச வேண்டாம். பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்காதீர்கள்.

சகோதர வகையில் பிரச்சினைகள் வெடிக்கும். 11.6.2018 முதல் 04.7.2018 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் வாகனம் பழுதாகும். கணவன் மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். புத்தாண்டு தொடக்கம் முதல் வருடம் முடியும்வரை ராகு 6-ம் வீட்டில் தொடர்வதால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். ஆனால், கேது 12-ம் வீட்டில் நீண்ட நாட்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விலகிச் சென்ற நம்பிக்கையான பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

இந்த 2018-ம் ஆண்டு உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.

பரிகாரம்: விருதுநகர் மாவட்டம், புளிச்சக்குளம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீபஞ்சமுக விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டு பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிக்க வைக்கும்.

source: dinasuvadu.com

Leave a Comment