கமலஹாசனின் கருத்துகளை படிக்க கோனார் உரை வேண்டும் : தமிழிசை

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு மத்திய அரசாங்கம் வரியை குறைத்துள்ளது. அதில் ஹோட்டல்களுக்கு 18% வரியானது 5%ஆக குறைந்துள்ளது.

இருப்பினும் பல ஹோட்டல்களில் இன்னும் விலை குறைப்பு செய்யாமல் உள்ளனர். அதலால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் சென்னையில்  ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை  பாண்டிபஜாரில் உள்ள 2 ஓட்டல்களில் இட்லி, வடை, கேசரி, குலோப் ஜாமூன் போன்றவை சாப்பிட்டார். பின் சரக்கு சேவை வரி சரியாக வசூலிக்க படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்த்தித்து பேசினார் அப்போது அவர் கூறியது:

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஓட்டல்களுக்கான சரக்கு சேவை வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஆனால் இதையும் தேர்தலோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கொச்சைப்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்பட்டு வரி குறைக்கப்படுகிறது.

ஆனால் பல ஓட்டல்களில் சரக்கு சேவை வரியை குறைத்து போட்டாலும் ‘எம்.ஆர்.பி.’ விலையை ஏற்றி அதை ஈடு செய்துவருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. எனவே சரக்கு சேவை வரி நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆய்வு செய்யப்படும். முதலில் அறிவுரை வழங்கப்படும். அவர்கள் சரி செய்யவில்லை என்றால் புகார் செய்யப்படும்.

சில ஓட்டல்கள் சரக்கு சேவை வரியை குறைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தினர் சரக்கு சேவை வரியை குறைக்கவேண்டும்.

நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்துகளை புரிந்துகொள்வதற்கு ஒரு கோனார் தமிழ் உரை வந்தால் நன்றாக இருக்கும். புரியாமல் பதிவுகளை போடுவதில் அவர் விற்பன்னராக இருக்கிறார். டுவிட்டரில் அவரவர் கருத்துகளை பதிவு செய்கிறார்கள். அதை அவரவர் கருத்தாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

காங்கிரஸ் தலைவராக யாரை தேர்வு செய்தாலும் அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு பாடுபடட்டும். ஆனால் மறுபடியும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தான் காங்கிரசில் பதவி வழங்கப்படுகிறது என்பதை மக்கள் இன்று உணர்ந்திருக்கிறார்கள்.

இவ்வாறு தமிழிசை சௌநதர்ராஜன் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment