அலுவலக நேரம் முடிந்த பின்னும் கூட பணி செய்வதால் குடும்பத்தின் நிலை என்ன ஆகும் தெரியுமா?

நாம் அனைவரும் எது அவசியம், எது ஆடம்பரம், எது முக்கியம் என்று உணராமல் வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்; விரைந்து செல்லும் உலகின் பயணத்தில் பயணிக்க, பெரும்பாலானோர் குடும்பம் எனும் முக்கியமான உலகத்தை தொலைத்து விடுகின்றனர்.

மனிதர்கள் குடும்ப அமைப்பில் வாழ்வது அவ்வளவு முக்கியமா? பணம் கொடுத்து படி அளிக்கும் வேலையை விட, பணத்தைக் கரைக்கும் குடும்ப உறவுகள் முக்கியமா? வேலையா குடும்பமா என்பதில் எது முக்கியம் என்று தேர்ந்தெடுக்க, அவ்விரண்டையும் குறித்த அலசல் அவசியம் – இது குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம்.

வேலை – நிறுவனம்

ஒரு நிறுவனத்தில் பணியாளராக சேர்ந்து நாம் பார்த்துக் கொடுக்கும் வேலைக்கு அளிக்கப்படும் கூலி தான் சம்பளம். இந்த சம்பளத்தை காரணம் காட்டி யாரேனும், எந்த நிறுவனமேனும் உங்கள் ஒட்டு மொத்த உழைப்பை சுரண்ட எண்ணினால் அது மிகப்பெரிய தவறு ஆகும்; அந்த தவறை அலுவலக நேரத்திற்கு பின் வேலை செய்து ஊக்குவித்தால், அது நீர் செய்யும் மன்னிக்க முடியாத – முட்டாள் தனமான செயலாகும்.

ஏதோ ஓரிரு முறைகளில், முக்கியமான காலகட்டத்தில் அதிக நேரம் வேலை பார்க்க நேர்ந்தால் அதில் தவறு இல்லை; ஆனால் எப்பொழுதுமே வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிறுவனத்தை, எதிர் கேள்வி கேட்காமல், ஆணைக்கு உட்பட்டு பணிபுரிவது பெரும் தவறு ஆகும்.

குடும்பம்

இவ்வாறு பணி புரியும் நிறுவனத்திற்காக, அவர்கள் தரும் ஊதியத்திற்காக குடும்பத்தை கவனிக்க மறந்தால், அது சரியான நடைமுறை அல்ல நண்பர்களே! நீங்கள் சம்பாதிப்பது யாருக்காக? உங்களுக்காக மற்றும் உங்கள் குடும்பத்துக்காக..! உங்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல், நீங்கள் அளிக்கும் பணம் மட்டும் போதுமா? அது உங்கள் குடும்பத்தாரை மகிழ்ச்சியூட்டுகிறதா என்று கேட்டு பாருங்கள்..!

கண்டிப்பாக எந்த ஒரு குடும்பத்தாரும் உங்களை அன்றி பணத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். நீங்கள் பணம் ஈட்ட தேவை எனும் காரணத்தை அளிப்பதே குடும்பம் தான்; ஆனால் பணத்தேவையைக் காட்டிலும் குடும்பத்திற்கு முக்கிய தேவை நீர் தான் என்பதை ஒவ்வொரு குடும்பத்தலைவனும் உணர்தல் வேண்டும்.

வேலை vs குடும்பம் – எது முக்கியம்?

வேலை அளிக்கும் நிறுவனங்கள் தொழிலாளி நல்ல தெம்புடன் இருக்கும் பொழுது மட்டுமே அவரை பணியில் வைத்திருக்கும்; தொழிலாளி சற்று துவண்டதும், அவரை தூக்கி எறிந்து விடும். அப்படி நிறுவனத்தால் தூக்கி எறியப்படும் பொழுது, உங்களை தாங்கி பிடிப்பது நிச்சயம் குடும்பமே..!

உங்கள் சக்தி மொத்தத்தையும் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அளித்து விட்டு, சக்கையாக குடும்பத்திடம் திரும்புவதில் என்ன பயன்? வாழ்க்கைக்கு பணம் அவசியம் தான்; அப்பணம் தரும் வேலையும் அவசியம் தான். ஆனால், இவை முக்கியமல்ல; பாசம் காட்டி, எந்த நிலையிலும் அரவணைத்து நேசம் காட்டும் குடும்பமே முக்கியம்.

நினைவுகளை சேகரியுங்கள்..!

ஆகையால், அலுவலக நேரங்களில் வேலை பாருங்கள்; அந்த நேரம் முடிந்த பின் எவ்வளவு வேலையாக இருந்தாலும் அதை அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம். அலுவலக நேரம் போக மீதி நேரத்தை உங்கள் குடும்பத்தாருடன் செலவழியுங்கள்; குடும்பத்துடன் சந்தோசமான நினைவுகளை சேகரியுங்கள். இந்த நினைவுகள் தான், பிற்காலத்தில் வாழ்க்கை நம்மை ஓய்வு நாற்காலிக்கு தள்ளும் பொழுது அசைபோட உதவும். குடும்பத்தின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்க்கையை வழி நடத்துமாறு, பதிப்பை படிக்கும் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..!

author avatar
Soundarya

Leave a Comment