டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா..? உயர்நீதிமன்றம் கேள்வி .!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா..? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தியாவில் கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மத்திய அரசு மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுபான கடைகள்  திறக்கப்பட்டன.

விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில், மதுபான கடைகளில் அதிக விலையில் மதுபானங்கள் விற்பதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்கப்படும்போது ரசீது வழங்கப்படுகிறதா..? தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா..? அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றதா..?  என கேள்வி எழுப்பியது.

மேலும், இதுவரை எப்படி மது கொள்முதல் செய்யப்பட்டது என ஜூன் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

author avatar
Dinasuvadu desk