டெல்லியில் நடந்தது என்ன ? விளக்கம் கேட்ட அமித் ஷா, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்

  • டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நேற்று மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.
  • இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா,மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.   

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் .

நேற்று பேராசிரியர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது முகமூடி கட்டிக் கொண்டு வந்த சிலர் கடுமையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு தாக்கினர்.இந்த தாக்குதலில் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் ஆயுஷ் கோஸ் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைந்தது.

இந்த தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியது.அந்த முகமூடி அணிந்த கும்பல் வளாகத்திற்குள் இரவு 9 மணி வரை இருந்துள்ளனர்.அவர்கள் கையில் ஹாக்கி மட்டை ,இரும்பு கம்பி செங்கல்களை கொண்டு கண்ணில் படும் பொருட்கள் அடித்து விடுதியை சூறையாடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் காயமைடந்த 28-க்கும் மேற்பட்டவர்கள்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் டெல்லி காவல் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜே.என்.யு பல்கலை கழத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மும்பை இந்தியா கேட் முன்பு  பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் லெஃப்டனன்ட் ஆளுநர் அனில் பைஜாலிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

டெல்லியை பொறுத்தவரை அங்குள்ள காவல்த்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.எனவே அமித் ஷா தாக்குதல் குறித்து டெல்லி காவல்த்துறையிடம் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.

ஆனால் தாக்குதல் குறித்து டெல்லி காவல்த்துறையின் தென் மேற்கு துணை கமிஷனர் தேவேந்திர ஆர்யா கூறுகையில், நாங்கள் தாக்குதலை  கவனத்தில்  எடுத்துள்ளோம். இந்த தாக்குதல் தொடர்பாக தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. நடந்த சம்பவங்கள் தொடர்பான சமூகவலைதள வீடியோ பதிவுகள் மற்றும் சிசிடிவி பதிவுகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.