மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் – காவல்துறை அதிரடி

சென்னையில் முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் நேற்று 567 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. அதுவும், தமிழகத்திலேயே சென்னையில் தான் பாதிப்பு அதிகம். சென்னையில், ராயபுரத்தில் 1,699 பேரும், கோடம்பாக்கத்தில் 1,231 பேரும், திரு.வி.க நகரில் 1032 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்றவைகளை பின்பற்ற வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகிறது. இந்தியா மட்டுமின்றி தமிழகத்திலும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று முதல் சென்னையில் முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறை முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

இதனிடையே, சென்னையில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் பல்வேறு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டது. தற்போது, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 774 இருந்து 655 ஆக குறைந்துள்ளது. இதில், ராயபுரம் மண்டலத்தில் 164 ஆக இருந்த தெருக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைக்கப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் மண்டலம் 124 லிருந்து 105 ஆக குறைத்து. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 86 பகுதிகள் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்