விஜய் வீட்டில் 2வது நாள் தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை.! இணையத்தில் ட்ரண்டாகும் WeStandWithVIJAY.!

விஜய் வீட்டில் 2வது நாள் தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை.! இணையத்தில் ட்ரண்டாகும் WeStandWithVIJAY.!

  • நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது.
  • நேற்றைய சோதனையில் AGS சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. திடீரென நேற்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் அளித்து, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து விஜயை அவரது காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அழைத்து வந்தனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் மற்றோரு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் விஜயின் குடும்பத்தினர் நிர்வகிக்கும் வங்கி லாக்கரை திறந்து ஆய்வு மேற்கொள்ளவும் வருமான வரித்துறையினர் முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸ் அலுவலகம் மற்றும் கல்பாத்தி அகோரம் குடும்பத்தாரின் வீடுகள், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகம் (பிகில் திரைப்பட தயாரிப்புக்கு உதவியதாகக் கூறப்படுகிறது). நடிகர் விஜயின் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

நேற்றைய சோதனையில் AGS சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பிகில் திரைப்பட தயாரிப்பின் பின்னணியில் உள்ள வரவுசெலவு கணக்கு, பணப்பரிவர்த்தனைதான் சோதனையின் அடிப்படை என்கிறது வருமானவரித்துறை பைனான்ஸ் செய்த அன்புச்செழியன், தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், நடித்த விஜய் ஆகிய மூன்று தரப்பும் தாக்கல் செய்த வருமானவரி ஆவணங்களை ஆய்வு செய்த வருமான வரித்துறை அதில் இருந்த முரண்களை அடிப்படையாக வைத்தே இந்த சோதனையை நடந்து வருவதாகக் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் தளத்தில் அவர்களது எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் #WeStandWithVIJAY என்ற ஹாஸ்டேக்கை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் வைத்துள்ளார்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube