அடுத்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்!இபிஎஸ்,ஓபிஎஸ் அணியின் கடைசி பட்ஜெட்…..

 தங்களின் கடைசி பட்ஜெட்டை ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ளனர். தினகரன் எம்எல்ஏ அடுத்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் பெயரளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள கடைசி பட்ஜெட் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையுடன் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

நாங்கள் கொடியை அறிவித்தவுடன் பயந்துபோய் அதிமுக கொடிபோல இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் பெயரில்லாமல் ஒரு அணியாக இருந்தோம். புதிய கட்சி ஆரம்பிக்கவில்லை. அஇஅதிமுக அம்மா என்ற அணியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் வைத்து அமைப்பாக செயல்படுகிறோம். இரட்டை இலை வழக்கு முடிவுக்கு வரும் வரை தற்காலிகமாக இதே அமைப்பில் செயல்படுவோம்.

அம்மா என்ற பெயருக்குள்ளே பெரியார், அண்ணா, திராவிடம் என அனைத்தும் அடங்கியுள்ளது. எனவே திராவிடம் என தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை தோற்கடித்தது எனக்கு வருத்தம் அளித்தது. ஆனாலும் நான் போட்டியிடாவிட்டால் திமுக வென்றிருக்கும். எனவே இரட்டை இலையை மீட்பதற்காகவே இரட்டை இலையை தோற்கடித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால், நானும் ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment