கேரளாவில் 3 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்ற தண்டர் போல்ட் படையினர்..!

தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக  கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் தமிழகம் மற்றும் கேரளா காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை மாவோயிஸ்டுகள் மூளை சலவை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அண்மையில்  மத்திய உளவுத்துறை இந்தியாவில் பாலக்காடு , வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளால் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து கேரளாவில் மாவோயிஸ்டுகளை  வேட்டையாட தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மஞ்சகட்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள்  இருப்பதாக கேரளா தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கு  தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட தண்டர்போல்ட் போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதை அறிந்து அவர்கள் அங்கிருந்து தப்பிக்க காவல் துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கு மேல் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மூன்று மாவோயிஸ்டுகள்  சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
murugan