திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி சிமெண்டு, பெயிண்ட் தொழிற்சாலை கண்டுபிடிப்பு உரிமையாளர் கைது!

திருவண்ணாமலை  மாவட்டம்  கலசபாக்கம் அருகே உள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 35). இவர் அதே கிராமத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இங்கு சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்து வந்தார். மேலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தார்.

அந்த நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, பெயிண்டுகள் தரமற்றவையாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நிறுவன அதிகாரிகள் விக்ரம், ஜேசுராஜ் ஆகியோர் அந்தோணி முத்துவின் கடைக்கு வந்து நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள அந்த நிறுவனத்தின் பெயிண்ட், சிமெண்டு போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதும், தங்களது நிறுவன பெயரை பயன்படுத்தி அந்தோணிமுத்து விற்பனை செய்து வந்ததும் அவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரிகள் கடலாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தோணிமுத்துவை கைது செய்தனர்.

அப்போது அந்தோணிமுத்து காஞ்சி மெயின் ரோட்டில் தனக்கு சிறிய அளவிலான தொழிற்சாலை உள்ளது. அங்கு தான் நான் போலியாக தயாரிக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அவர்களுடன் தனியார் நிறுவன அதிகாரிகளும் சென்றனர்.

அங்கு சிமெண்டு தயாரிக்கப்படும் எந்திரங்கள், பெயிண்ட் கலவை, டப்பாக்கள், போலி சிமெண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து அந்த தொழிற்சாலைக்கு பூட்டு போட்டனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment