தினம் ஒரு திருப்பாவை

  • மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
  • பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம்

திருப்பாவை

பாடல் : 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும்

மாமகன் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;

மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்

ஊமையோ? அன்றிச் செலவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

‘மாமாயன் மாதவன் வைகுந்த’  னென்றென்று

நாமம் பலவும் நவின்றலோ ரெம்பாவாய்.

– ஸ்ரீ ஆண்டாள்-

பாடல் விளக்கம்:

தூய  மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் எரியவும்,அகில் முதலியவற்றின் புகை மணக்கவும்,தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையில் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகள் இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை ஆதலால் அவள் தாயை எழுப்ப வந்தவர்களின் மாமியை அழைத்து,அவளை எழுப்பும் படி  வேண்டுகின்றனர்) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் சொல்லாதலால் ஊமையோ? அல்லது செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கிறளோ? மாமாயனே,மாதவனே! வைகுந்தனே! என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை;அவளை எழுப்ப மாட்டீர்களோ? என்று ஆண்டாள் இயற்றி உள்ளார்.

 

author avatar
kavitha