கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்-மு.க.ஸ்டாலின்

கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே  தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் நேற்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை கூட்டுறவு வங்கிகள் நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு.கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் என்று பதிவிட்டுள்ளார்.