மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ..! நல்லாசிரியர் விருது வாங்கிய ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை.!

  • 2012-ஆம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதால் நாகராஜ், புகழேந்தி ஆகிய இருவரும் கைது கைது செய்யப்பட்டார்கள்.
  • நேற்று  உயர்நீதிமன்றம் நீதிபதி வேல்முருகன் நாகராஜூக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ,புகழேந்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து  உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  +1, +2 மாணவிகளுக்கு நாகராஜ், புகழேந்தி ஆகிய இருவரும் ஆசிரியராக பணியாற்றி வந்து உள்ளனர்.  கடந்த 2012-ஆம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் , ஆபாச படங்களை செல்போன் மூலம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மாணவிகளின் பெற்றோர்கள் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் இருவரும் கைது கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்றும் உள்நோக்கத்தோடு புகார்கள் எழுந்ததாக கூறி அவர்களை விடுதலை செய்தது.இந்த விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மாணவியின் பெற்றோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நீதிபதி வேல்முருகன் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். இவருக்கான தண்டனை விபரங்கள் பிப்ரவரி 25-ம் தேதி  அறிவிக்கப்படும் என கூறினார். மேலும் அன்று இருவரையும்  காவல்துறை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று நீதிபதி வேல்முருகன் ஆசிரியர்களுக்கான தண்டனையை   கூறினார்.அதில் நாகராஜூக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ,புகழேந்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆசிரியர் நாகராஜ் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk