சொத்துக்காக 82 வயது மூதாட்டியை வீட்டினுள் அடைத்த வைத்த நபர் கைது.!

சொத்துக்காக 82 வயது மூதாட்டியை வீட்டினுள் அடைத்த வைத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரியில் உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் கமலாபாய்(82). இந்த மூதாட்டி மகள் விமலா சாந்தா என்பவருடன் தனியாக வசித்து வந்தார். 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தாலும், வீட்டில் முடங்கிக் கிடக்க விரும்பாத காரணத்தால் விமலா சாந்தா கிரஷர் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். சில நாட்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த விமலாவால் தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக செல்ல முடியாமல் போய் விட்டது.

இந்த நிலையில் விமலா வேலைக்கு சென்ற இடத்தில் பணிபுரியும் யுகேந்திரன் என்பவர் விமலா வேலைக்கு செல்லாததை தொடர்ந்து வீட்டில் சென்று நலம் விசாரித்து வந்தாராம். இதற்கிடையில் விமலா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரழக்க, ஆதரவின்றி நின்ற மூதாட்டியை யுகேந்திரன் அடிக்கடி நலம் விசாரித்து சென்றுள்ளார். இந்த நிலையில் மூதாட்டியின் சொத்துக்கு ஆசைப்பட்டு யுகேந்திரன் அவரை வீட்டினுள் அடைத்து வைத்துள்ளதாகவும், மூதாட்டியை மீட்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் உட்பட பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் ஆகிய பலர் கோரிக்கை வைத்தனர். அதன்படி சம்பவத்தன்று எம்எல்ஏ மனோ தங்கராஜ் மூதாட்டியை அடைத்து வைத்துள்ள வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் விரைந்து வந்து யுகேந்திரனிடம் வீட்டை திறக்க சொல்லி கண்டிக்க, அவரும் வீட்டை திறந்துள்ளார்.

அப்போது வீட்டின் ஒரு மூலையில் மூதாட்டி சுரண்டு கிடந்துள்ளார். அவரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து யுகேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவர் தினமும் மூதாட்டிக்கு உண்ண உணவும், குடிக்க தண்ணீரையும் ஜன்னல் வழியாக கொடுத்து அவரை காப்பாற்றியது நான் தான் என்று கூறியுள்ளார். அதனையடுத்து மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் எம்எல்ஏ மனோ தங்கராஜ் மூதாட்டியை அடைத்து வைத்திருந்த யுகேந்திரன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் செய்துள்ளனர்.