புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சூடு.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

புல்வாமாவில் நடந்த தாங்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கன் என்ற கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத்தகவல்களை அடுத்து, இந்திய ராணுவத்தின் சிறப்பு பாதுகாப்பு படை, 55 ராஷ்டிரிய ரைபிள் மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து, தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வீட்டில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த வீட்டில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடார். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.