ஒருபக்கம் எல்லையில் பதற்றம்.! மறுபக்கம் தங்கள் நாட்டவரை அழைக்கும் சீனா.!

லடாக் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டவரை அழைக்கும் சீனா.

சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

தலைநகர் டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் சிறப்பு விமானங்களில் சீனாவுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் தங்களது குடிமக்கள் சீனா திரும்ப மே 27 (நாளை) கலைக்குள் பதிவு செய்யுமாறு அந்நாட்டு தூதரகம் உத்தரவிட்டுள்ளது. தாயகம் திரும்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீனா செல்பவர்களுக்கு கட்டுப்பாடு :

மேலும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீனா அனுப்பும் சிறப்பு விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது. இதற்குமுன், சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய போது அங்கு தவித்து வந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். தற்போது, சீனா தமது குடிமக்களை இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்கிறது.

லடாக் எல்லைப்பகுதியில் சீன, இந்தியா இடையே பதற்றம் :

இதனிடையே, மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளில் ஊடுருவி, பின்னர் அந்த பகுதி தங்களுக்கே சொந்த என கூறி பிரச்சனைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது சீனா. தற்போது, சீனா இந்தியா மீது கண்வைத்துள்ளது. லடாக் பகுதியில் இந்திய சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 5 ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறியதோடு கற்களை வீசி இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, அது மறுநாள் காலை வரை நீடித்தது.

இருநாட்டு படைகளும் மோதல் – பதுங்குகுழி அமைப்பு :

இதனையடுத்து பிரச்னை முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி சிக்கிம் எல்லையில் இருநாட்டு படைகளும் மோதின. இதனால் எல்லையில் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது. கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வைத்துள்ளது. லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்திய எல்லைக்கு அருகிலேயே சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டு தங்கியுள்ளனர். மேலும், பதுங்கு குழிகளை அமைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் படகுகள் மூலம் நுழைகின்றனர். இதுபோன்று பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியாவும் இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களை குவித்துள்ள மத்திய அரசு, ரோந்து பணிகளையும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க கமாண்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருக்கும் சீனர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்