இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டத்தில் தமிழக காங்கிரசும் கலந்து கொள்ள வேண்டும்-சிதம்பரம்

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரசும் கலந்து கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார். சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.அந்த பதிவில், தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது.

தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.


இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.மேலும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரசும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில் ,இதை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.