பெரியார் சிலை சேதம் ..! பாமகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி கைது

  • காஞ்சிபுரத்தில்  பெரியார் சிலை சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.இந்த விவகாரத்தில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றது.ஆனால் பாஜக மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க மறுபுறம் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள களியப்பேட்டை என்ற கிராமத்தில் ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை பெரியார் சிலையில் மூக்கு, கை பகுதியில்  சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.எனவே காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார் .இது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிவிப்பில்,  தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி திரிபாதி தெரிவித்தார். . இதுதொடர்பாக  போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  விசாரணையில் ,பெரியார் சிலையை சேதப்படுத்தியது பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமோதரன் என்பது தெரியவந்தது.எனவே போலீசார் இது தொடர்பாக பாமக முன்னாள் நிர்வாகி தாமோதரனை கைது செய்துள்ளனர்.