விதிமுறைகளை தளர்த்தி ‘பல்க்’ டிக்கெட் புக்கிங்கை எளிதாக்கிய தெற்கு ரயில்வே.!

  • தெற்கு ரெயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.
  • தற்போது தெற்கு ரெயில்வே அந்த கட்டுப்பாடுகளை நீக்கி, எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. அதனால் சுற்றுலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குழுக்களாக செல்வோர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு மைய கண்காணிப்பாளர், நிலைய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்குவார்கள். அந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமானால், ரெயில்வே கோட்ட மேலாளர் அனுமதி பெறவேண்டும். இதனால் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி, சுற்றுலா, விளையாட்டு போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மொத்தமாக டிக்கெட்களை முன்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் இருந்தது. இந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வகுப்பில் வேண்டுமானாலும், எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள முன்பதிவு மைய கண்காணிப்பாளர் அல்லது நிலைய அதிகாரியின் அனுமதி பெற்றால் போதுமானது, என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்