உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி !இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து

உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை சிந்து சாதனை படைத்துள்ளார்.

சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.நேற்று நடைபெற்ற  மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து சீனா வீராங்கனையான டாய்-டிஸு-யிங்கை  வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம்  மூன்றாம் முறையாக பிவி சிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.இந்த நிலையில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவின்  இறுதிப்போட்டி நடைபெற்றது.இறுதிப்போட்டியில் சிந்து ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹாராவுடன் மோதினார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 21-7, 21-7  என்ற செட்டில் வெற்றிபெற்றார்.

இதன் மூலமாக இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.மேலும் இந்திய வீராங்கனை ஒருவர் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.ஏற்கனவே இந்த உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு முறை இறுதிப்போட்டியில் ,மோதிய சிந்து வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.