செல்லூர் ராஜு மட்டும் விஞ்ஞானி அல்ல ,ஜெயக்குமாரும் ஒரு விஞ்ஞானி -கே.எஸ்.அழகிரி

  • திமுக-காங்கிரஸ் உறவு  ஒட்ட வைத்தாலும் மறுபடியும் உடைந்துதான் போகும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
  • அமைச்சர் ஜெயக்குமாரும் ஒரு விஞ்ஞானியாக உருவாக்கியுள்ளார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டது.இதன் பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.

இதன் பின்னர் ஏற்பட்ட கருத்து மோதல்களால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வந்த  நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்,  திமுக – காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசியுள்ளோம்.  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  திமுக, காங்கிரஸ் உறவு உடைந்த கண்ணாடி போன்றது.அதனை ஒட்ட வைத்தாலும் மறுபடியும் உடைந்துதான் போகும் என்று கூறினார்.இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,அதிமுகவில் செல்லூர் ராஜூ மட்டுமே விஞ்ஞானி என்று நினைத்தோம்.ஆனால் ஜெயக்குமாரும் ஒரு விஞ்ஞானியாக உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.