பதவியை ராஜினாமா செய்யுங்கள் தினகரன் ! புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்

எம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போட்டி அமமுக  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம்  அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமமுக  கட்சியின் சார்பாக வெளியான செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் 14 பேர்பெயர்   இடம் பெற்றது.ஆனால் அதில் புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மீண்டும் அமமுக  வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று கோவை மண்டல அமமுக கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போட்டி அமமுக  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் பின்னர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,டிடிவி தினகரன் பின்னால் இனி பயணிக்க முடியாது. நமது கனவு பொய்த்துவிட்டது இனி தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது.இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் யாரிடம் விலைபோனார் தினகரன்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக சகாப்தம் முடிவுக்கு வரும்.அதிமுக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம்.தினகரனிடம் எந்த ஸ்லீப்பர் செல்லும் கிடையாது என்று தெரிவித்தார்.