இடஒதுக்கீடு விவரகாரம் : வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இடஒதுக்கீடு விவரகாரம் : வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அனைத்து இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை” என்று திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ, அல்லது மாண்புமிகு பிரதமர் அவர்களோ நாடாளுமன்றத்தில் உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன? மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற 27 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube