3 முறை நிராகரிப்பு.. ஆகஸ்ட் 14-ஆம் தேதி சட்டசபை கூடுகிறது.!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்  தடை விதித்தது. இதனால், முதல்வர் கெலாட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா 3 முறை கூட்டத்தொடர் கூட்ட அரசு தரப்பில் கொடுத்த பரிந்துரை கடிதத்தை நிராகரித்தார்.

முதல் இரண்டு பரிந்துரை கடிதத்தில், கொரோனா பாதிப்பு குறித்தும், சில மசோதாக்கள் பற்றியும் ஆலோசிக்க வேண்டுமென அரசு கூறியதே தவிர, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறவில்லை என கூறினார்.

மேலும், சட்டப்பேரவையை கூட்ட 21 நாள் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்பது போன்ற 3 நிபந்தனைகளை ஆளுநர் அறிவித்தார். ஆனால், ராஜஸ்தான் முதல்வர் கெலாட் வரும் 31-ம் தேதி முதல் சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தி 3-வது முறையாக பரிந்துரை கடிதம் அனுப்பினார். நேற்று  இந்த கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, நேற்று மாலை சபாநாயகர் சி.பி.ஜோஷி மீண்டும் ஆளுநரை சந்தித்தார். அப்போது, ஆளுநர் உத்தரவுப்படி ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென வலியுறுத்தி அரசு தரப்பில் 4-வது முறையாக பரிந்துரை கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட்டப்படும் என ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

author avatar
murugan