இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23–ந்தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் ராமேசுவரம் செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராமேசுவரம் வந்தனர். அப்போது மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளம், அப்துல் கலாம் நினைவிடம், கோவில் ரத வீதிகள் போன்ற பகுதிகளில் பார்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று ராமேசுவரத்தில் தாசில்தார் ஜீவரேகா, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ரோட்டரிகோ ஆகியோர் முன்னிலையில் பஸ் நிலையத்தில் இருந்து லட்சுமண தீர்த்தம், ராம தீர்த்தம், மேலத்தெரு, நடுத்தெரு, கோவில் நான்கு ரதவீதிகள் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது கடைகள் முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த நிழற்கூரைகள், பிளாட்பாரங்கள் போன்றவை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்த பணியில் வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதேபோல தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளிலும் துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் தலைமையில் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Leave a Comment