ரஜினி தனது ரசிகர்களை அவமானப்படுத்தியுள்ளார் -வேல்முருகன்

ரஜினி தனது ரசிகர்களை அவமானப்படுத்தியுள்ளார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்தித்தார்.இதன் பின்னர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உள்ளாட்சி தேர்தலில் வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற்றமைக்கு வாய்ப்பளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களை கவர்ந்த கருணாநிதி 93 வயதிலும் நீதிமன்றம் சென்ற போது, ஒரு நடிகர் விவிலக்கு கேட்பது அபத்தமானது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று .ரஜினி தனது ரசிகர்களை அவமானப்படுத்தும், அசிங்கப்படுத்தும் செயல் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  கருத்து தெரிவித்தது தொடர்பாக  நடிகர் ரஜினிகாந்த்  இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டார்.மேலும் அவரது மனுவில்,   நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று  கூறினார் .கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.