பாஜகவுக்கு மகாபாரதத்தை கற்றுக்கொடுத்த ராகுல் காந்தி.!

ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகள் கவுரவர்களைப் போல் அதிகாரத்திற்காக சண்டையிடுவதாகவும், காங்கிரஸ் கட்சி பாண்டவர்களைப் போல் உண்மைக்காக போராடுவதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர்க்கே மகாபாரதத்தை உவமையாக வைத்து ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84 வது மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் உரையாற்றிய கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் சரமாரியாக சாடினார். பாஜக என்பது ஓர் அமைப்பின் குரல் என்றும், காங்கிரஸ் என்பது மக்களின் குரல் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். குருட்சேத்திரப் போரில் கவுரவர்களைப் போல அதிகாரத்திற்காக பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் போராடுவதாக கூறிய ராகுல்காந்தி, காங்கிரசோ பாண்டவர்களைப் போல உண்மைக்காக போராடுவதாக கூறினார். விவசாயிகள் துன்பத்தில் உழல்வதாகவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுவதாகவும் தெரிவித்த ராகுல்காந்தி, பிரதமரோ உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதாக குற்றம்சாட்டினார்.

நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கு மதிப்பளிப்பது காங்கிரஸ் கட்சி என்றும், ஆர்எஸ்எஸ்சோ அதற்கு நேரெதிரானது என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார். இந்த நாட்டை மதித்தும், நேசித்தும் வரும் இஸ்லாமியர்களை பாஜக அரசு அச்சுறுத்துவதாக தெரிவித்த ராகுல்காந்தி, தமிழக மக்கள் அவர்களது அழகிய தாய்மொழியை கைவிட்டு மாற்று மொழியைப் பேச பாஜகவால் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். உலகத்தின் பார்வை தற்போது அமெரிக்கா, சீனா என்ற இரண்டு நாடுகளின் தரப்புக்குரியதாக மட்டுமே இருந்து வருவதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் அவை இரண்டுக்கும் மத்தியில் இந்தியாவை மற்றொரு தரப்பாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு சுவர் இருப்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாகவும், அதனை அன்பால் இடித்துத் தள்ளுமாறு மூத்த தலைவர்களைத் தாம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ராகுல்காந்தி தமது மாநாட்டு நிறைவுரையில் குறிப்பிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment