முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு-திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து  திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டம்  நடத்தியது.இந்த போராட்டத்தில் ,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம்  நடைபெற்றது.

இந்நிலையில் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில்,எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வண்ணாரப்பேட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார்.அவர் பேசுகையில், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் .தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்த தூண்டியது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர்  வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பேரவையில் விளக்கம்  அளித்தார்.அவர் பேசுகையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர் .பேருந்துகள் மீதும் காவலர்கள் மீதும் கல் மற்றும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர் என்று பேசினார்.ஆனால் முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது.