தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட்ட 11 பேரின் மீதான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை….
தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட்ட 11 பேரின் மீதான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை….
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்ற உடன் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.அப்போது அதிமுக பிளவுபட்டு தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 வாக்குகள் என்ற பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானமும் வெற்றி பெற்றது.இதனால் சொந்த கட்சியின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தி.மு.க.ழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது. இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் சக்கரபாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோரும் கோர்ட்டில் முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும்போது, அது தொடர்பான கேள்விக்குள் நீதிமன்றம் ஏன் செல்ல வேண்டும்? என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது.இந்த வழக்கு விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.