இனி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும்தான்.! ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஒவைசி.!

  • உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மக்கள்தொகையை  கட்டுப்படுத்த 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி பேசினார். 
  • தெலுங்கானாவில் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டத்தில் பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என பதிலடி கொடுத்தார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, இங்கு கட்டுப்பாடற்ற மக்கள்தொகை நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல, நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டம் வேண்டும் என வலியுறுத்தி, அதில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தெலுங்கானாவில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, அப்படி பேசியதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றன. பின்னர் பல பாஜக தலைவர்களுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே ஆர்எஸ்எஸ்-க்கு இருக்கிறது என்றும், இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என தெரிவித்தார்.

மேலும், எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார், பின்னர் 2018-ல் வேலைவாய்ப்பின்மை காரணத்தினால் ஒரு நாளைக்கு 36 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நரேந்திர மோடியின் அரசை ஒவைசி குற்றசாட்டினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களால் வேலைவாய்ப்பை கொண்டுவர முடியாது. அதனால் தான், 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதைத்தொடர்ந்து இந்திய மக்கள் தொகையின் 60% சதவீதம் பேர், 40 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் என்றும் ஒவைசி பதில் கருத்து தெரிவித்தார்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்