நீதிமன்ற உத்தரவையும் தாண்டி ஆவின் தலைவராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இன்று ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக செயல்பட துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம்  சகோதரர் ஓ.ராஜா செயல்பட  இடைக்காலதடை விதித்தது.மேலும் இவரது தலைமையிலான  இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் இடைக்கால  தடை  விதித்தது.இதன் பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.விதிப்படி தேர்தடுக்கப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆவின் ஆணையர் விதிப்படி தற்காலிக மற்றும் நிரந்தர குழு அமைப்பது பற்றி முடிவு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய விதிப்படி பழைய உறுப்பினர்கள் மீண்டும் பதவியேற்றுள்ளனர்.குறிப்பாக  துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம்  சகோதரர் ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.