வட மாநிலங்களான டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் கடும் மூடுபனி!விமானம், ரயில் சேவை கடும் பாதிப்பு…..

புத்தாண்டு தினத்தில் வடமாநிலங்கள் மிக மோசமான பனிப்பொழிவை சந்தித்துள்ளன. டெல்லியின் பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக சற்று தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்தது. இதனால், தொடக்கத்தில் அங்கு சுமார் 350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
பின்னர் விமான நிலையமே தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் விமான சேவைகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுகின்றன. டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையமும் பனிப் பொழிவுக்கு தப்பவில்லை. அங்கு வரவேண்டிய 56 ரயில்கள் தாமதமான நிலையில் 20 ரயில்கள் வேறு மார்க்கங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி ஷாதிப்பூர், சிரி ஃபோர்ட். ஐ.டி.ஓ., துவாரகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்கின்றன.
வாரணாசி, அலகாபாத், கான்பூர், ஜான்சி, ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் அடர்த்தியான பனிப்போர்வை காணப்பட்டன. இதனால் இந்த இடங்களில் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மூடுபனி காரணமாக வாரணாசியிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
பீகாரின் பாட்னா, முசாஃபர்பூர், சமஸ்டிப்பூர், ஷியோஹர், தர்பங்கா உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிக்கு 12 பேர் உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 3 புள்ளி 6 டிகிரி செல்ஷியசாக பதிவானது..
 
 
source: dinasuvau.com

Leave a Comment