விவசாயி என கூறும் முதலமைச்சரின் விரல் நகத்தில் மண் இல்லை, ஊழல் கறைதான் உள்ளது -மு.க.ஸ்டாலின்.!

  • நேற்று மதுரை ஒத்தக்கடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  • அப்போது பேசிய ஸ்டாலின் விவசாயி என கூறும் முதலமைச்சரின் விரல் நகத்தில் மண் இல்லை, ஊழல் கறைதான் உள்ளது என  கூறினார்.

நேற்று மதுரை ஒத்தக்கடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்  திமுகவில் இணைந்தார்.

இந்த கூட்டத்தில்  பேசிய மு.க.ஸ்டாலின் , திமுக ஆட்சியில் தமிழக கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது .அதிமுக ஆட்சியில் ரூ.4.65 லட்சம் கோடியாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சியை விட பழனிசாமியின் ஆட்சியில் தான் அதிக  கடன் உள்ளது என கூறினார்.

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அதிமுகவினர் வைத்த பேனரால் சென்னையில் சுபஸ்ரீ இறந்தார் , கோவையில் அனுராதா காயமடைந்தார். இந்நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக என்ன தகுதி இருக்கிறது..? என மு.க.ஸ்டாலின் கேட்டார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 7.27 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாயி என கூறும் முதலமைச்சரின் விரல் நகத்தில் மண் இல்லை, ஊழல் கறைதான் உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk