தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்பயா குற்றவாளிகள் புதிய மனு

மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் அக்சய் மற்றும் பவன் ஆகியோர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதன் பின் குற்றவாளிகள் 4-பேருக்கும் மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் அக்சய் மற்றும் பவன் ஆகியோர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.அவர்களது மனுவில்,2வது கருணை மனுவும் நிலுவையில் இருப்பதால், தங்களது மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை விசாரிப்பதாக கூறிய நீதிமன்றம்,திகார்  சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு நோட்டீஸ்  அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.