நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை மறு தேதி அறிவிக்க கோரிய மனு…இன்று விசாரணைக்கு வருகிறது…

கடந்த  2012-ம் ஆண்டு இந்தியாவையே அதிரவைத்த செய்தி, டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த செய்தியாகும். இந்த கொடூர சம்பவம்  தொடர்பாக  கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர், மற்றும்  ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், 6 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையிலேயே  தற்கொலை செய்து கொண்டான். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து இந்த கொடூர குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த  ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.பின்பு  தூக்கிலிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டு பின், குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், இதன் பின்னர்  தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

 

எனவே டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை அவசரமாக விசாரிக்கக்கோரி  நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையிடப்பட்டது. இதையடுத்து வழக்கை பிப்ரவரி 11-ஆம் தேதி விசாரிப்பதாக  நீதிபதிகள் அமர்வு அறிவித்தது. இதன்படி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ,விசாரணை நீதிமன்றத்தை அணுகி புதிய தேதியை பெற்று கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிற இருக்கிறது. இந்தவிவகாரம் இந்தியர்கள் அனைவரையுமே உற்று நோக்கவைத்துள்ளது.

author avatar
Kaliraj