பழி தீர்த்தது நியூசிலாந்து அணி ! ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் நிக்கோலஸ் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் சிறப்பான தொடக்கத்தில் நிக்கோலஸ் 41 ரன்களில் வெளியேறினார்.இதனையடுத்து கப்தில் மற்றும் டாம் ஜோடி இணைந்தது.இந்த ஜோடி சற்று தாக்கு பிடித்தது.இதில் டாம் 22 ரன்களில் வெளியேறினார்.ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வீரர்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து கொண்டிருந்தனர் . ஆனால் ராஸ் டெய்லர் மட்டும் களத்தில் தனி ஆளாக நின்று போராடினார்.

பழி தீர்த்தது நியூசிலாந்து அணி ! ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி
ராஸ் டெய்லர்

இறுதியாக நியூசிலாந்து அணி 50  ஓவர்களில் 8  விக்கெட்டை இழந்து 273 ரன்கள் அடித்தது.நியூசிலாந்து அணியில்  அதிகபட்சமாக  கப்தில் 79 ரன்கள், ராஸ் டெய்லர் 73 * ரன்கள் அடித்தார்கள். களத்தில் ராஸ் டெய்லர் 73 * ரன்களுடனும்  ,ஜமிசன் 25 * ரன்ககளுடனும் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் சாகல் 3 விக்கெட்டுகள்,தாகூர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால்  களமிறங்கினார்கள். ஆனால் பிருத்வி ஷா 23 ரன்கள் , அகர்வால் 3 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கேப்டன் கோலி 15 ரன்களில் சவுத்தி பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிதைத்தனர்.

 

  பழி தீர்த்தது நியூசிலாந்து அணி ! ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி
ஸ்ரேயாஸ் அய்யர்

தடுமாறிய இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்  ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு நாள் போட்டிகளில் 7-வது அரை சதம் அடித்தார்.ஆனால் அரை சதம் அடித்த வேகத்தில் அவரும் 52 ரன்களில் வெளியேறினார்.இதன் பின்னர் வந்த ஜாதவ் 9 ரன்கள், தாகூர் 18 ரன்களில் வெளியேறினார்கள்.அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் வெளியேறிய நிலையில் ஆல் -ரவுண்டர் ஜடேஜா களமிறங்கினார்.ஜடேஜாவுடன் ,சைனி ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல போராடியது.ஆனால் சைனி 45 ரன்களிலும், ஜடேஜா 55 ரன்களிலும் வெளியேறினார்கள்.இறுதியாக இந்திய அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 251 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பெணட்  ,சவுதி ,ஜமிசன் மற்றும் கிராண்ட் ஹோம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.தொடரை  2-0 என்ற கணக்கில் கைப்பற்றி டி-20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியதற்கு பழி தீர்த்தது நியூசிலாந்து அணி. இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி வருகின்ற 11-ஆம் தேதி டாருங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.