நீட் ஆள்மாறாட்ட வழக்கு : உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தைக்கு அக்டோபர் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில்  உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசனுக்கு வரும் அக்டோபர் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். பின்னர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனும்  சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு  விசாரணை  நடத்தினார்கள்.
இதற்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனும் 15 நாள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிந்து,இன்று  தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அங்கு   உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசனுக்கு வரும் அக்டோபர்  24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.