ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும் – தினேஷ் குண்டு ராவ்

ஸ்டாலின் அடுத்த முதல்வராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில் வரும் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் வரவேண்டும் தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

மக்களவை தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன் முதலாக ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை, நாங்கள் நன்றி உணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார். இத்தகையை அறிவிப்பால் கவரப்பட்ட தமிழ் மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான ஜனநாய முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெற செய்தனர்.

அதுபோன்று, ஸ்டாலின் அடுத்த முதல்வராக வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில் வரும் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கும். வரும் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் வலியுறுத்தி கூறுகிறேன். இன்று காலை சென்னையில் நடந்த செய்தியலாளர்கள் சந்திப்பில், நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால், இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்