உலகின் 7-வது பணக்காரர் அம்பானி ! வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி என்ற பெயர் அனைவரும் அறிந்ததே ஆகும். ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தார்.ஆனால் சமீப காலமாக கச்சா எண்ணையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் அம்பானியின் செல்வாக்கும் சரிந்தது.இதனால் ஆசியாவில் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்தியாவை பொருத்தவரை கொரோனா காலத்தில் பெரும் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றது.இந்த சமயத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் 24.17 % பங்குகளை விற்றார்.இதன் பங்குகளை உலகின் முன்னணி நிறுவனங்களாக உள்ள ஃபேஸ்புக்  உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கியது.இதன்விளைவாக அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது.மொத்தம் 70.1  பில்லியன் டாலராக சொத்து அதிகரித்தது. இதன்  மூலம் கடன் இல்லாத நிறுவனமாக  அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியது.ஏற்கனவே அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு இருந்தார்.

இந்நிலையில் தற்போது அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று   ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் தெரிவித்துள்ளது .இதனால் உலகின் பெரும் முதலீட்டாளராக கருதப்படும் வாரன் பஃபெட் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 67.8 பில்லியன் டாலராக உள்ளது  என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.