சாத்தான்குளம் விவகாரத்தில் பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை – சிபிசிஐடி

சாத்தான்குளம் விவகாரத்தில் பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்  மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் காவலர் முத்துராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த  சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.அதாவது,பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.தனிப்பட்ட நபரையோ, அமைப்பையோ இழிவுபடுத்தி இந்த வழக்கில் தொடர்புபடுத்தி பதியப்பட்ட பதிவுகளை அகற்றுங்கள், அல்லது சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.