வரும் 2035 வரை ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு சீன அதிபராக ஜின்பிங் பொறுப்பேற்றார். அவரது 2-வது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது. இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர மாநாடு சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள் மற்றும் 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின், இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமை குழு சார்பில் மத்திய குழு உறுப்பினர்கள், அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து 2035-ம் ஆண்டு வரை ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது தனது 82 வயது வரை சீனாவின் அதிபர் ஜின்பிங் இருக்க அக்கட்சி அனுமதி அளித்துள்ளது. அங்கு அதிபர் பதவியை தவிர கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலர் பதவி, ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றையும் சேர்த்து கவனித்து வரும் ஜின்பிங், இந்த பதவிகளில் ஆயுள் முழுவதும் இருப்பார் என கூறப்படுகிறது.