ஜெ.தீபா அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் – அமைச்சர் ஜெயகுமார் பேச்சு!

ஜெ. தீபா அவர்கள் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளலாம் என்று  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு, ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபா அவர்கள் எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்  என்ற தனி கட்சி ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று திடீரென தான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க போவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், அதிமுக என்பது பெரிய அணை  என்று தீபா அவர்கள் தற்போது தான் உணர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார். எனவே, தீபா அவர்கள் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் தன்னை அதிமுகவில் இணைந்து கொள்வதாக அறிக்கை விடலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தினகரன் என்பவர், உரிக்க உரிக்க வரும் வெங்காயம் போல என்றும் அவரிடம் இருக்கும் கருப்பு பணத்தை வைத்து பெரிய அரசியல்வாதி என்ற செயற்கையான பிம்பத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.