அதை போராட்டத்தால் மட்டுமே நிறுத்த முடியும் – சசிதரூர்

  • குடியுரிமை திருத்த சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது.
  • போராட்டத்தால் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டை  தடுத்து நிறுத்த முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.இந்த சட்டமும் ஜனவரி 10-ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கேரளா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

ஆனால் இந்த சட்டத்திற்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.இது தொடர்பாக பல இடங்களில் விளக்க கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது.அதன்படி கூட்டங்களும் நடத்தி வருகின்றது.இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறுகையில், குடியுரிமைச் சட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடியும்,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன சமாதானம் சொன்னாலும் அவர்களது நோக்கம் தெளிவாக உள்ளது. மேலும் போராட்டத்தால் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டை  தடுத்து நிறுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.