IPL 2018:சொன்னதை செய்து காட்டிய மிஸ்டர் 360!விராட் கோலி பெருமிதம்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்  11-வது ஐபிஎல் தொடரில் 45-வது லீக் போட்டியில் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் ஜேஜே ராய சொற்ப ரன்களில் சாஹல் பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். ரிஷப் பந்த் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் பந்தில் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் 32 ரன்களில் வெளியே அபிஷேக் ஷர்மா களமிறங்கி ராயல் சேலஞ்சர்ஸ் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 19 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பார்த்தீவ் படேல் மற்றும் மொய்தீன் அலி வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும் ஏபிடி வில்லியர்ஸும் டெல்லி பந்துவீச்சை நான்குபுறமும் சிதறடித்தனர். நேர்த்தியான ஷாட்டுகளை ஆடிய 40 பந்துகளை சந்தித்த கோலி 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்தார்.

ஏபிடி வில்லியர்ஸ் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 37 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். 19 ஓவர்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பின் பேசிய விராத் கோலி, ‘சரியான நேரத்தில் கிடைத்த வெற்றி இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மைதானத்தில் டெல்லி அணியை விட எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது சரியான முடிவுதான். ஏனென்றால் சேசிங்கில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்துக்கொள்வார்கள். டிவில்லியர்ஸுடன் பேட்டிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. கடினமான சேஸிங்தான். வில்லியர்ஸ்தான், ‘கவலைப்படாத, இந்தப் போட்டியில நாம் ஜெயிக்கிறோம்’ என்றார். அதன்படியே அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடன் பேட்டிங் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். ஆனால், பாதியிலேயே நான் அவுட் ஆனது ஏமாற்றம் அளித்தது. மூன்று ஓவருக்கு முன்பே ஆட்டத்தை முடித்து புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சி செய்தோம்’ என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment