போராட்டத்தில் தடியடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் -கனிமொழி

நேற்று நடைபெற்ற  போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில்  நடத்தியது.இந்த போராட்டத்தில் ,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது முகநூல்  பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சிஏஏ / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் கபில்குமார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அதிமுக அரசு. வண்ணாரப் பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, கபில் குமார் சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.