சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும்- ராகுல் காந்தி ட்வீட்

அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

மேற்கண்ட மூவர் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். மெகபூபா முப்தி மட்டும் விடுவிக்கப்படாமல் இருந்துவந்தார். இதனிடையே மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும். மெகபூபா முப்தியை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இது தான்  என்று பதிவிட்டுள்ளார்.