#Under19WorldCup : கோப்பை யாருக்கு ? தனியொருவனாக போராடிய ஜெய்ஸ்வால் !

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில்  நடைபெற்று  வருகிறது.இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான இறுதிப்போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா களமிறங்கினார்கள்.ஆனால் திவ்யான்ஷ் சக்சேனா தொடக்கத்திலேயே 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.பின்னர் ஜெய்ஸ்வாளுடன்  திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது.இந்த சமயத்தில் திலக் வர்மா 38 ரன்களில் வெளியேறினார்.ஆனால் மறுமுனையில்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் தனது 4 வது அரை சதத்தை பதிவு செய்தார்.பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 ரன்களில் வெளியேறினார்.இதன் பின்னர் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சீட்டுக்கட்டுபோல சரிந்தனர்.கேப்டன்  பிரியாம் கார்க்  7 ரன்கள், துருவ் 22 ரன்கள்,  சித்தேஷ் வீர் ரன் எதுவும் எடுக்கவில்லை ,அதர்வா அங்கோலேகர் 3 ரன்கள் ,ரவி பிஷ்னோய் 2 ரன்கள், சுஷாந்த் மிஸ்ரா 3 ரன்கள் , கார்த்திக் தியாகி ரன் எதுவும் எடுக்க வில்லை.ஆகாஷ் சிங் 1 ரன்னுடன் களத்தில் நின்றார்.

இறுதியாக இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே அடித்தது.வங்கதேச அணியின் பந்து வீச்சில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.இதன் பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடவுள்ளது.