விமர்சிக்க விரும்வில்லை,கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருக்கிறேன்..!பொன்ராதாகிருஷ்ணன்

  • அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
  • கூட்டணி தர்மத்திற்காக அமைச்சர் ஜெயகுமாரை விமர்சிக்க விரும்வில்லை என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிதாக  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களிலும் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களிலும் வெற்றிபெற்றது.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜகவின் மூத்தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் பாஜக  தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்ற பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கூட்டணியில் இருந்து கொண்டு எதிரான கருத்துக்களை கூறுவது கூட்டணி தர்மம் இல்லை என்று தெரிவித்தார்.இந்த கருத்து மோதல்கள் முடிவடைவதற்குள் மீண்டும் பொன் .ராதாகிருஷ்ணன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.

பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில் ,தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டது என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தற்போது தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை ..?எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் , சமீபத்தில் தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதாக மத்திய அரசே பாராட்டியது. பாஜக மாநிலத் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்  என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,எனக்கு அமைச்சர் ஜெயக்குமார் சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை. எனது செயல்பாட்டை பற்றி  ஜெயலலிதா 2 முறை கூறி இருக்கிறார்.கூட்டணி தர்மத்திற்காக அமைச்சர் ஜெயகுமாரை விமர்சிக்க விரும்வில்லை .முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது மரியாதை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.