வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டு வற்புறுத்தக்கூடாது – புதுவை முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டு வற்புறுத்தக்கூடாது என்று  புதுவை முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு  உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகைகள் எடுத்து வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் . புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. 

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  பேட்டியளித்தார்.அப்பொழுது  கூறுகையில்,அடுத்த 3 மாதங்களுக்கு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை தருமாறு வற்புறுத்தக்கூடாது .வேறு யாரேனும் டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் .டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரியை சேர்ந்த 6 பேர் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.