வரலாற்றில் இன்று(12.02.2020)… தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யூ.போப் மறைந்த தினம் இன்று…

அமெரிக்க கண்டத்தின் கனடாவில்  பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல்மதம் 24ம் நாள் பிறந்தவர். இவரது  தந்தை ஒரு வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் நங்கு பயின்ற பிறகு,தனது  சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். இவர் தமிழகம் வர கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.பின் இவர்,, தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயராகியோரிடம்  தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றார்.  தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார். தான் போற்றிக் கொண்டாடும் மேலைநாட்டு மெய்ஞானிகளின் வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார். இவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக சுமார், 13 ஆண்டுகள் பணியாற்றினார். பின் 1886-ல் தமிழ் பாடத்தில்  முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் இவர், புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பா ஆகியவற்றைப் பதிப்பித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை 3 பாகமாக எழுதினார்.  இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியதுஎன்றே குறிப்பிடலாம். திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் தனது 88 வயதில் 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் நாள்  இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரது கல்லறை இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் உள்ளது. இத்தகைய தமிழ் தொண்டாற்றிய ஜி.யூ.போப் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

author avatar
Kaliraj